ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தும் கோரப்பட்ட போது, உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என முடிவு செய்யப்ட்டது
13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஸ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.