யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்ற விசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேகநபர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அதற்கு உடந்தையாக இருந்த வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று பொலிஸ் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) என தெரிவித்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் கைதான பிரதான சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கண்டியில் இன்று கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.