யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை (23) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊடக விவரிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஸான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு பற்றி விளக்கமளிக்கப்பட்டது
அதன் விவரம் வருமாறு:
மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம், நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் , தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஸாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
முதல் நாள் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு , அதன் எதிர்காலம் என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ சில்வா பிரதம விருந்தினராகவும் , இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட நிலையியற் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சமந்தா உனம்பூவே சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்வருட மாநாட்டின் புதிய முயற்சியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் சிலர் முறையான ஆய்வு மேற்பார்வைக்குட்பட்ட தமது ஆய்வுக் கட்டுரைகளை முதல் நாள் மாலை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் கனதியானதும் காலப் பொருத்தம் வாய்ந்ததுமான சர்வதேச சட்ட மாநாட்டில் ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.