இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்nருந்த 80 சதவீத கொள்கலன்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்
அத்துடன் இது நாட்டின் வரி வருமானத்தில் பாரிய இழப்பை ஏற்பட்டுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக எழுந்துள்ள துறைமுக கொள்கலன் நெரிசல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்,
கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசலுக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்றை அரசு திட்டமிட்டு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80 சதவீத கொள்கலன்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த விடுவிப்புகள் குறித்து சுங்கச் தொழிற்சங்கங்கள் கூட தற்போது கேள்வி எழுப்பி வருகின்றன.
இதை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் மற்றும் தரக்குறைவான மருந்துகள் இல்லை என அரசாங்கத்தால் எவ்வாறு கூற முடியும்? என சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்
பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் நுகர்வோருக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அரசாங்கம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?
இந்த கொள்கலன்களை விடுவிக்க உத்தரவிட்டவர்கள் குறித்து அரசாங்கம் தகவல்களை வெளியிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்