திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் வழக்கொன்றுக்காக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேக நபர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு நிலைமையையும் கேட்டறிந்து கொண்டார்.
இதையடுத்து அவரிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை தொடுத்திருந்தனர்.
கேள்வி ; நீதிமன்ற வளாகத்துக்குள் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். வீதியில் அப்பாவி பிள்ளைகள் கொல்லப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
பதில் ; இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி ;அமைச்சரே இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
பதில் ; ஆம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளோம். அது தொடர்பில் விடயங்களை கேட்டறியவே சம்பவ இடத்துக்கு வருகை தந்தேன்.
கேள்வி ; நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? பட்டகலில் நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எவ்வாறு கூற முடியும்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
இதன்போது நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன் பிரதி அமைச்சர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியமை குறிப்பிடத்தக்கது