மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல், பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய கனிய மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இது மக்களுக்கான அரசாங்கம். எனவே, மன்னார் மக்கள் கிலேசம் அடையத் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று (19-02-2025) கனிய மணல் ஆய்வினை மேற்கொள்ள கள விஜயம் செய்த குழுவினர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கனிய மணல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குறித்த ஒரு நிறுவனம் ஆய்வினை மேற்கொள்ள வந்ததாக தகவல் கிடைத்திருந்தது.
இது தொடர்பாக உடனடியாக குறித்த அமைச்சுக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அவர்களின் கவனத்துக்கும் கொண்டுசென்று உடனடியாக அந்த செயற்பாட்டை நிறுத்துவதற்குரிய பணிப்புரையை விடுத்திருந்தோம்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டது. அந்த வகையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
அவரும் இச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மன்னார் மாவட்ட மக்களுடைய நலன் சார்ந்த வாழ்வியலை, பொருளாதாரத்தை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எமது அரசாங்கத்தில் எந்த விதத்திலும் இடமில்லை.
கடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இதனை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதற்கமைய இதனை தடுத்துள்ளோம். எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் எமது அரசாங்கம் செயற்படும்.
கடந்த கால அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படும். இது தொடர்பாக மக்கள் கிலேசம் கொள்ளத் தேவையில்லை.
இது மக்களுக்கான அரசாங்கம். மக்களுக்காகவே செயற்படும் எனத் தெரிவித்தார்.

