மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.
இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், ‘புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது’ என்று அறிவித்தார்.
இந்நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்தனர்.
இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.
தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்துள்ளனர்.

