2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட குழு விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.
அதன்படி இன்றும் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு விவாதம் முடிவடைந்த பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.
இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பும் பெப்ரவரி 25 ஆம் திகதி நடத்தப்பட்டது.
அதில், 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பெப்ரவரி மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை அதாவது இன்று மாலை 6.00 மணிவரை 19 நாட்கள் இடம்பெற்று வருகின்றது.
இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

