கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோசிதவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு யோசித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது யோசிதவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த மோதல் சம்பவம் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யோஸித ராஜபக்ஸவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.

