நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை கைது செய்வதற்கான 20 பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவிசாவளை – பொரலுகொட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
கைதான பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சொகுசு வீடுகளை வாடகைக்குப் பெற்று வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.