காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி அந்த இளைஞனை கொழும்பு 1 புதிய செயலக கட்டிடத்தில் உள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுப்புக்காவலில் மார்ச் 25ம் திகதி முதல் 90 நாட்கள் வைப்பதற்கு உத்தரவிடுவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்த ஆவணம் வெளியானதை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி ஏமாற்றம் வெளியிட்டுவருகின்றனர்.
ருஸ்டியை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர நான் ஏமாற்றப்படுகின்றேன் குறிப்பிட்டுள்ளார்.
1988-89 இல் 60,000 பேரை கொலை செய்வதற்கான சட்ட பாதுகாப்பினை பயங்கரவாத தடைச்சட்டமே வழங்கியது, 1970கள் முதல் ஜேவிபி இதனை கடுமையாக எதிர்த்துவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் அருகம்பே சம்பவம் இடம்பெற்றது, ஐந்துபேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,இஸ்ரேலியர்கள் விசா முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்துவர்த்தகத்தில் ஈடுபடுவது, ஆலயங்களை அமைப்பது,அரசாங்கத்திற்குதெரியாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசா முடிவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருந்தால் அதற்காக ஒரு வருடசிறைத்தண்டனையை விதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

