உள்ளூர் முக்கிய செய்திகள்

வட, கிழக்கில் ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது – தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி பேச்சு

வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில், அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டுமென கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆராயும் சந்திப்பு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை (16) யாழ். கந்தரோடைரையில் அமைந்துள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வேந்தன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் செல்வராஜா கஜேந்திரன், காண்டீபன் மற்றும் தீபன் திலிஷன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்படி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து பயணிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள், இணைந்து பயணிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், இருப்பினும் தமது இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஒருசில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரமே ஆட்சி அமைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமது கட்சி ஆகிய மூன்றும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் குறித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

இதுகுறித்து நேற்றைய தினம் தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தாம் பிரஸ்தாபித்தாகவும், அதுபற்றி கட்சியின் மத்திய குழுவில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தமிழ் அரசு கட்சி பதிலளித்ததாகவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேசரிக்குத் தெரிவித்தார்.

அதேவேளை வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்க் கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், அச்சபைகள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் இச்சந்திப்பின்போது இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்