காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
எமக்கான நீதி கோரி நாங்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட உறவுகளை இழந்துள்ளோம். தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்கள் இறந்துள்ளனர்.
எனவே மீதமுள்ள சாட்சிகளாக உள்ள நாங்களும் இறப்பதற்கு முன்பாக எமக்கான நீதியை சர்வதேசம் வழங்கவேண்டும். கொலைக்குற்றங்களை செய்த அரச படைகளை விசாரிக்க இயலாத அரசாங்கம் தமிழ் இனத்தை ஏமாற்றி வருகிறது.
எனவே, எதிர்வரும் ஐ.நா கூட்டத் தொடரிலாவது எமக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையூடான நீதி ஒன்றை வழங்கவேண்டும் என்று கேட்டு நிற்கின்றோம் என்றனர்.
இதையும் படியுங்கள்>கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு!



