பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த ‘ஷான் சுத்தா’ வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ‘ஷான் சுத்தா’ இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

