தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ உறுதியளித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் (ஆசியான்) அமைச்சர் மட்ட நிகழ்வுகளின் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10-07) நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கை – ரஷ்ய நல்லுறவில் அழுத்தங்களைத் தோற்றுவித்திருக்கும் விடயங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
இது வரவேற்கத்தக்க நகர்வு எனவும், இவ்விடயத்தில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகக் குறிப்பிட்ட அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நேர்மறைத் தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன் எதிர்காலக் கூட்டிணைவுக்கு ஏதுவான வகையில் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத், குறிப்பாக பொருளாதார நெருக்கடியின்போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ரஷ்யா அளித்துவரும் தொடர் ஆதரவுக்கும், நீண்டகாலமாகப் பேணிவரும் வலுவான நட்புறவுக்கும் நன்றி தெரிவித்தார்.
அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழமான பல்துறைசார் ஒத்துழைப்பின் ஊடாக மேலும் உறுதிப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

