அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், அமெரிக்காவின் தீர்வை வரியை இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும்.
அதேநேரம் தற்போது 30 சதவீதத்துக்கு குறைத்துக்கொண்டிருப்பதன் மூலம் மகிழச்சியடைய முடியுமா என்பதை எமக்கு போட்டியாக இருக்கும் நாடுகளுடன் சந்தை நிலவரத்தின் பிரகாரமே தீர்மானிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று (14-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போதே தீர்வை வரி அதிகரிப்பதாக டொனால் ட்ரம் தெரிவித்திருந்தார்.
ட்ரம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுடன் அரசாங்கம் இதுதொடர்பில் கலந்துரையாடி இருக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் செயற்பட்டு வருவதால், நாங்கள் திட்டமிட்டு செயற்பட்டிருந்தால் சிறந்த நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொண்டிருக்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே இந்தியா அது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாட ஆரம்பித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால் எமது அரசாங்கம் இறுதிக்கட்டத்திலே இது தொடர்பான கலந்துரையாடுவதற்கு சென்றார்கள்.
அதுவும் அதிகாரிகள் மட்டத்திலே இது இடம்பெற்றது.
இதனைவிட உயர் மட்டத்தில் கலந்துரையாட முடிந்திருந்தால் எமக்கும் இன்னும் வரி நிவாரணத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.
அதேநேரம் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு, எமது நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் 20 சதவீத அளவுக்காவது எமக்கு குறைத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தை பெரிதாக கண்டுகொள்ளாமல், இறுதி நேரத்திலே செயற்பட ஆரம்பித்தது.
வரி அதிகரிப்பு தொடர்பில் அமெரிக்காவின் அறிவிப்பு வந்ததுடன், உடனடியாக அரசாங்கத்தின் குழுவொன்றை அமெரிக்காவுக்கு அனுப்பி, கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லையென திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்

