வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில், மேலும் ஐந்து பேர் நேற்று (18-07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
அன்றைய இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மரணத்திற்கு பொலிசார் காரணம் எனக் கூறிய குழுவினர் குழப்பத்தை ஏற்படுத்தி, பொலிசாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைக்காக அங்கு சென்ற பொலிசாரை அப்பகுதியிலிருந்த மக்கள் தாக்கியதுடன், அந்த சம்பவத்தில் ஐந்து பொலிசார் காயமடைந்தனர். மேலும், பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கப் ரக வாகனம் சேதமடைந்தன.
சம்பவத்துடன் தொடர்புடைய அரச சொத்துக்களை சேதப்படுத்தல், மக்கள் கூட்டத்தை ஏற்படுத்தல், பொலிசாரின் கடமையில் இடையூறு ஏற்படுத்தல் மற்றும் மரணத்திற்குக் காரணமாக இருந்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னணியில், மேலும் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

