உள்ளூர்

மனித புதைகுழிகளை அகழ நிதி, நிபுணத்துவம் வழங்க வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்ததுள்ளது

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு, பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்களை அகழ்வதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் போன்ற தேவையான வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியத்தை அரசு ஆராய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள், ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29வது அமர்வை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட 25 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அமர்வு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3 வரை நடைபெற உள்ளது.

அறிக்கையில், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில், எல்லா சமூகங்களிலும், தெற்கில் கிளர்ச்சி மற்றும் வடகிழக்கில் ஆயுதமோதல்களின் பின்னணியிலும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, காணாமல் போனவர்களின் உறவினர்கள், சுயாதீன ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகவாதிகள் நீண்ட காலமாக உண்மை மற்றும் நீதிக்காக போராடி வருகின்றனர் என்பதும் அறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள், பொருளாதார சவால்கள், அச்சுறுத்தல்கள் உள்ளபோதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆணையம், அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களையும் மேற்கோள் காட்டியுள்ளது.

27,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் விசாரணை ஆணையங்களால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

மேலும், காணாமல்போனோர் அலுவலகத்தில் 21,000க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன.

2009 மே மாதம் சரணடைந்த பின்னர் காணாமல் போன 1000 சம்பவங்களும் இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்:

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களை விசாரணை செய்ய சுயாதீன மற்றும் நிரந்தர அமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக தீர்வு காணும் வகையில் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

வலுக்கட்டாய காணாமலாக்கங்களை ‘பரந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்’ என சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச தரநிலைகளின்படி இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

மனித எச்சங்களை அகழ்வதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் கீழ், இவ்வகை காணாமலாக்கங்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக கருதும் வகையில், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது குறித்து அரசு ஆராய வேண்டும்.

இந்நிலையில், இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்