இலங்கை உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்றும் அதில் இருந்த நால்வரும் மன்னார் வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜூலை 21)ஆம் திகதி இரவு, மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மேற்கொண்ட கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது, இந்திய மீன்பிடி படகுகள் பல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தமை கவனிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வட மத்திய கடற்படைக் கட்டளைக் குழு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்துக் கப்பல்களின் ஒத்துழைப்பில், இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடலுரிமை எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், ஒரு இந்திய மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எல்லை விதிகளை மீறி சட்டவிரோதமாக உள்நாட்டு நீர்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் தலைமன்னார் இறங்குத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் தினைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

