பனை உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் நாட்டுக்கு பெரும் அந்நியச் செலவாணியை ஏற்படுத்தி வருகின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்றுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடி உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்பதையும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு, ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்ற தலைப்பிலான கண்காட்சி நல்லூர் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இன்று காலை ஆரம்பமாகியது.
இந்த கண்காட்டியை ஆளுநர் ஆரம்பித்து வைத்து, ஒவ்வொரு கண்காட்சிக் கூடங்களையும் பார்வையிட்டார்.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக உரையாற்றிய ஆளுநர், மில்வைக்ட் கனகராஜா என்பவர், பல இடங்களில் பனை விதைகளை நடுகை செய்து வளர்த்தவர் என்றும், பனைகள் இல்லாத தேசம் இருக்கக் கூடாது என்ற நோக்கில் உழைத்தவர் என்றும் நினைவுகூர்ந்தார்.
அவரின் நினைவு நாள் இந்த பனை வாரத்துக்கான ஆரம்ப நாளாகக் குறிக்கப்பட்டிருப்பதையும் ஆளுநர் தெரிவித்தார்

