வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத் துறையினர் மற்றும் வவுனியா குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனையை நடத்தியுள்ளனர்.
இதற்கமைய, நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகிலிருந்த பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் நிலத்தின்கீழ் பதுக்கி வைக்கப்பட்ட 86 கைக்குண்டுகள், டி 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டன.
இதனை தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையில் வவுனியா குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில், பொலிஸ் பரிசோதகர்கள் ராஜபக்ச, ராஜகுரு மற்றும் அதிகாரிகள் ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஸ். கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

