தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை பிரான்ஸ் தலைநகரில் நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென முன்னாள் இராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஜகத்டயஸ் வலியுறுத்தினார்.
புலம்பெயர் தமிழர்களை திருப்தி செய்யும் நோக்கத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளிலிருந்து பாலசிங்கத்தை தனியாகப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கனடா பயணத் தடை விதித்ததற்குப் பின்னர் இந்நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் பிரித்தானிய பிரஜையாக இருந்த பாலசிங்கத்தின் செயல்களும் பொறுப்புகளும் அதனுடன் தொடர்புடையவையென்று வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்ப் புலம்பெயர்ந்தோர் தங்கள் பிரிவினைவாத திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளுவதில் இலங்கை நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது என அவர் சாடினார்.
விடுதலைப்புலிகளை தூய்மை படுத்தும் முயற்சியில் அவர்கள் கொடிகளை ஏற்றி நிகழ்வுகளில் பங்கேற்பதும் அவர்களின் சிலைகளை நிறுவுவதும் ஒரே மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்றும் ஜகத்டயஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரான்ஸில் நடைபெறும் சிலை நிறுவல் தொடர்பாக இலங்கை தூதரகம் எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் அரசாங்கம் பொதுமக்களிடம் வெளிப்படையாக விளக்கவேண்டும் எனவும் இதுவரை அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியால் இதுபற்றி எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

