வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விழாவுக்காக, கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை, பாரம்பரிய வழக்கின்படி செங்குந்தர் பரம்பரையினரால் வழங்கப்படுகிறது.
இதற்கமைய, யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் சிறிய தேர் ஒன்றில் பருத்தித்துறை வீதியூடாக கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்து பிரதம குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகோற்சவம் நாளை தொடங்கியவுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
இதில் 10ஆம் நாளான மஞ்சத் திருவிழா ஆகஸ்ட் 7ஆம் திகதி, 22ஆம் நாளான மாம்பழத் திருவிழா ஆகஸ்ட் 19ஆம் திகதி, 24ஆம் நாளான தேர் திருவிழா ஆகஸ்ட் 21ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
இறுதியாக மாலை நடைபெறும் கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையும்.

