திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்கா அருகேயுள்ள கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் திடீரென விஜயம் மேற்கொண்டு, அந்த காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அந்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான தீர்மானத்திற்காக எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி சட்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி இன்று நேரில் பார்வையிட்டார்.
கடந்த ஜூலை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ‘ஆயுபு’ என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி நீதிமன்றம், அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலக அதிகாரிகள் கலந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அகழ்வுப் பணிகள் குறித்து தீர்மானிக்க, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடமிருந்து அறிக்கைகள் கோரப்பட்டு, அவை கடந்த ஜூலை 30ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவை அடிப்படையில் அகழ்வை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்க ஓகஸ்ட் 6ஆம் திகதி சட்ட மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்க வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆய்வின்போது மண்டை ஓடு, கைகள், கால்கள், முள்ளந்தண்டு, விலா எலும்புகள் உள்ளிட்ட கூடுதல் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

