முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாத நிலையில், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்பு அனுப்பப்பட உள்ளன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், முல்லைத்தீவு–ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ். அவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.
சடலம், நீதவானின் முன்னிலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிஸார் ஆரம்ப விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனை முடிவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பு அனுப்பப்பட்டுள்ளன.

