முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம், இராணுவத்தினரின் அடக்குமுறையையும் அராஜகத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் அராலியில் ஊடகங்களுக்கு அளித்த கருத்தில் அவர், தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்ந்து நிலவி வருவதை சுட்டிக்காட்டினார்.
யுத்தகாலத்தில் காணப்பட்ட அளவிலான இராணுவச் சூழல், இன்று வரை இப்பகுதிகளில் நீடித்து வருவதாகவும், அதேசமயம் தென்பகுதிகளில் இத்தகைய பரவலான இராணுவப் பங்களிப்பு எங்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் தாயகங்களில் இருக்கும் இராணுவப் படைகளை தென்பகுதிகளுக்கு மாற்றி அனுப்பினால், இந்த இராணுவ மயமாக்கலை குறைக்கலாம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், முத்து ஐயன்கட்டு குளத்தடியில் நடந்த குடும்பஸ்தரின் படுகொலை, இராணுவத்தினரின் அடக்குமுறையின் இன்னொரு தெளிவான சான்றாக இருப்பதாகவும், இத்தகைய அராஜகங்களை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் கோமகன் தெரிவித்தார்.

