முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார்.
இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் பிரிவுகள் 01 முதல் 04 வரை, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாகவும், பல பிரிவுகள் மக்களின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையும் மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, குறித்த சட்டமூலத்தின் கேள்விக்குரிய பிரிவுகள் நிறைவேற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை வாக்குகளும், பொதுமக்கள் வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

