ஜெனீவா மனித உரிமைச் பேரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர் தரப்பினரும் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து, மொரீசியஸ் வெளிவிவகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் சில உயர் அதிகாரிகளை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து உரையாடியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயல்பட்டு வருவதாகவும், இதுவரை ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 60ஆம் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
அக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைமைகளை விவரிக்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை கோரியுள்ளது.
மேலும், இலங்கை தொடர்பான தீர்மானங்களை கருக்குழு நாடுகள் முன்வைக்கும் போது, குறிப்பாக இன அழிப்பு தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேரவை வலியுறுத்தி வருகிறது.
தமிழ்த்தேசிய போரவை, முன்னாள் ஜனாதிபதி பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன் மற்றும் சில அமைப்புகள், ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அடுத்த மாதமான ஒக்டோபரில், இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைவதால், புதிய தீர்மானம் ஒன்றை மனித உரிமைச் சபை முன்வைக்கவுள்ளது.
அந்தத் தீர்மானத்தில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழர் தரப்பு கோருகிறது.
மேலும், சில அமைப்புகள், இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

