யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு–கிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று ஒன்றிய செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தனிப்பட்ட அரசியல் கட்சியின் அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு அளிக்க முடியாது.
கடையடைப்பிற்கு அழைப்பு விடுவதற்கு முன், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். பின்னர் பொதுவான திகதியில் மட்டுமே அறிவிப்பு விடப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுயமாக இயங்கும் அமைப்பாக இருப்பதால், ஒருசிலர் தனிப்பட்ட தீர்மானம் எடுத்து அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றியம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க, பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகளை மீளளிக்க, மற்றும் அராஜகத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்காக ஒன்றியம் குரல் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், சில தரப்புகள் தமது சுயலாபங்களுக்காக அரசியல் செய்வதை ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் துணை போகவுமில்லை என்றும் அனோஜன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணை பூரணமாக தயாரிக்கப்பட்டு, பாடங்கள் வழக்கமான முறையில் நடைபெறும். மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் வழமைப்போல் ஈடுபடுவார்கள்.

