வடக்கு – கிழக்கில் தழுவிய ஹர்த்தால் இன்று (18-08) முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிலையங்கள் மூடப்பட்டன.
பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வணிக நிலையங்கள் இயங்கினாலும், பல கடைகள் கதவடைப்பில் ஈடுபட்டன.
வடக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவு கிடைத்திருந்தாலும், அதற்கு இணையான எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, போராட்ட நேரத்தை மட்டுப்படுத்தி நடத்துமாறு எம்.ஏ. சுமந்திரன் நேற்று (17-08) அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், மன்னாரின் பல பகுதிகளில் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்தபோதும், மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைபோலவே இடம்பெற்றது.
அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் சீராக இயங்கியதோடு, பொதுமக்களின் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


