வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற சாலை விபத்தில், பெண் உட்பட இருவர் உயிரிழந்ததோடு, 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பட்டா ரக இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர் வளவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வீதியில் கவிழ்ந்தது.
அப்போது, அந்த வாகனத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு மேற்பட்டோர் பயணித்திருந்தனர்.
விபத்தினால் பயணிகள் அனைவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு கடுமையாக காயமடைந்தனர்.
தடம்புரண்ட வாகனத்துடன் பின்னால் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனரக வாகனம் மோதியதால் சேதம் மேலும் அதிகரித்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியைச் சேர்ந்த யாழினி (33), சுயன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீட்டிற்கு சென்று, மீண்டும் விசுவமடு நோக்கி திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், படுகாயமடைந்தவர்களில் மூவரின், அதில் சிறுவன் ஒருவரின், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

