நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.
80 இலட்சம் ரூபா நிதி மோசடி குறித்த ஒழுக்காற்று நடவடிக்கையின் போது குமார ஜயகொடி குற்றவாளியாக்கப்பட்டதுடன், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கும் அப்போதைய பணிப்பாளர் சபை தீர்மானம் எடுத்தது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிதி மோசடி வழக்கொன்றில் தான் குற்றவாளியாக்கப்பட்டதை அமைச்சர் குமார ஜயகொடி தானே ஒப்புக்கொண்டதாக புபுது ஜயகொடை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஊழல் மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட அல்லது அவ்வாறான குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு பதவி வழங்கப்படமாட்டாது என தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்ததே இவர்கள்.
ஆனால், இன்றோ நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை பிரதான அமைச்சராக நியமித்திருப்பது எங்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது’ என்றார்.
அதேநேரம், அரசாங்கம் தனது கொள்கைகளையும் அரசியல் தீர்மானங்களையும் நாட்டின் மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அரசாங்கம் செயல்படுவது மிகவும் கவலைக்கிடமான நிலை என அவர் தெரிவித்தார்.

