இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மேம்படுத்துவது ஒவ்வொரு தூதுவரின் பிரதான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி சமமாகச் சேவைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களை நன்கு புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா, வேலைவாய்ப்பு என்ற நான்கு துறைகளில் தூதரகங்களுக்கு விசேட பொறுப்பு இருப்பதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், அந்நியச் செலாவணி வழிகளின் பெரும்பகுதி தூதரகங்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடையது என்பதால், அவை இலங்கை பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் செய்வது காலத்தின் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய இராஜதந்திரிகள் பின்வருமாறு:
இந்தோனேசியத் தூதுவர் – எஸ். எஸ். பிரேமவர்தன
பிரேசில் தூதுவர் – சி. ஏ. சி. ஐ. கொலொன்ன
மாலைதீவு உயர்ஸ்தானிகர் – எம். ஆர். ஹசன்
துருக்கி தூதுவர் – எல். ஆர். எம். என். பி. ஜி. பி. பி. கதுருகமுவ
நேபாளத் தூதுவர் – ருவந்தி தெல்பிடிய
தென் கொரியா தூதுவர் – எம். கே. பத்மநாதன்
ஓமான் தூதுவர் – டபிள்யூ. ஏ. கே. எஸ். டி. அல்விஸ்
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

