முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதியும் வழங்கப்பட்டது.
ஆனால் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதன் காரணமாக சிறை வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில், சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

