மட்டக்களப்பில் 18 வயது இளைஞர் ஒருவர் தன்னை தாய்தந்தையற்று வளர்த்த உறவினரின் வீட்டிலிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய சம்பவத்தில், குறித்த இளைஞனும், அவரது நண்பனும், திருடிய தங்கத்தை வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21-08) இடம்பெற்றதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் தந்தையை இழந்த குறித்த இளைஞனை அவரது உறவினர்கள் வீட்டில் தங்கவைத்து, பிள்ளையாய் வளர்த்து, படிக்கச் செய்து பராமரித்து வந்தனர்.
ஆனால், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போனதையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
விசாரணையில், அலுமாரியில் இருந்த 16 பவுண் எடையுடைய எட்டு தங்கக் காப்புக்களை குறித்த இளைஞனே திருடியிருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர் நண்பனுடன் சேர்ந்து அந்த ஆபரணங்களை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைக்கடையில் விற்றுள்ளதாகவும், அதனால் கிடைத்த பணத்தில் ஆறு லட்சம் ரூபா மதிப்பிலான மோட்டார் சைக்கிள், கைடக்க தொலைபேசி, உடைகள் வாங்கியதுடன், உணவகங்களில் உணவு உண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து, இளைஞனும் அவரது நண்பனும், தங்கத்தை சட்டவிரோதமாக வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, வரும் மாதம் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

