முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் ‘ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்’ என்று கூறியவர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அங்கு இருதரப்பினரின் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் பிணையளிக்க போதுமான காரணிகள் இல்லாததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இன்று நீதிமன்றத்தை விமர்சிக்கும் இவர்கள், பிணை வழங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தைப் புகழ்ந்திருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டவுடன், தேர்தல் காலத்தில் கடுமையாக மோதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.
இவர்களில் 99 சதவீதமானோர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தமது குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்திலேயே இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதுவே உண்மை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறிய குற்றங்களுக்கு கூட அபராதம் செலுத்த முடியாமல் பலர் இன்னும் சிறையில் உள்ளனர்.
ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த தவறுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சில முன்னாள் ஜனாதிபதிகள் வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது என்பதை மக்கள் ஆராய வேண்டும் என்றார்.
அதிகாரத்தில் இருந்தோர்கள் அல்லது தற்போது உள்ளோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால், சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை எவ்வாறு ஏற்படும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க நாளை கொழும்புக்கு ஒரு தரப்பினர் வருவதாகத் தகவல் உள்ளது.
கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் நீதிமன்ற உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் தில்வின் சில்வா எச்சரித்தார்.

