திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூட்டத்தில் பங்கேற்றார். மேலும், இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, ‘திருகோணமலை மாவட்டத்தை பொருளாதார மையமாக மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்’ எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், மாவட்டத்தின் கனிம வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி அவற்றிற்கு மதிப்பை கூட்டி ஏற்றுமதிக்குத் தகுந்த திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் தொழில்களுக்காக பயன்படுத்தப்படுவது மொத்த நிலப்பரப்பில் 0.01 சதவீதமட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தொழில்களுக்கு உகந்த நிலங்களை பதிவு செய்து தொழில்துறை மையங்களை உருவாக்கவும், அமைச்சரவை இடையிலான ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படத்தக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றார்.
மாவட்ட தொழில் குழுக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தொழில்களை மேம்படுத்த அரசாங்கம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதோடு, பல அபிவிருத்தி திட்டங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

