முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (29) வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

