இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்தனர். பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரினர்.
இந்நிலையில் போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதாக ஒத்துக் கொண்டார்.
இந்நிலையில் அவர்கள் சந்தேக நபரை விட்டுவிட்டு இலஞ்சப் பணத்தினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
போதைப்பொருள் வைத்திருந்தவரின் தரப்பினர் இதுகுறித்து காங்கேசன்துறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு இலஞ்சத்தை கொடுப்பதுபோல் பாசாங்கு செய்வதற்காக அவர்களது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு இலஞ்சத்தை கொடுப்பதற்கு முயற்சித்தவேளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இதையும் படியுங்கள்> செம்மணி மனித புதைகுழியில் இன்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 209 ஆக உயர்வு

