ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் செயற்பாட்டை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்த குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் உரையாற்றினார்.
அதன்பின், யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டம் ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை நூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார்.
இந்த வைபவத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, க. இளங்குமரன், ஜெ. ரஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நூலக வாசகர் வட்டத்தினரும் பங்கேற்றனர்.

