வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதி வழங்கிய நிலையில், அதே நேரத்தில் இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் கைது மற்றும் சிறைபிடித்தல், எதிர்காலத்தில் பிற இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படும் அபாயத்தைக் காட்டுகிறது என்றார்.
‘யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் இன்றைய அரசாங்கம் செயல்படுகிறது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இராணுவத்தினர் குறிவைக்கப்படுகின்றனர்.
இராணுவத்தினரை பாதுகாக்க நாங்கள் நிபந்தனையற்ற வகையில் முன்னிலை வகிப்போம்.
இந்த செயற்பாட்டிற்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது’ என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது வடக்கில் நினைவேந்தல்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

