யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமுலாகும்.
1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டம் எண் 16 மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தச் சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்திலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் பேராசிரியர் இ. குமாரவடிவேல் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் இ. குமாரவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூத்த கல்வியியலாளராக விளங்குகிறார்.
பௌதிகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், விஞ்ஞான பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் முன்னர் பதவி வகித்தவர்.

