வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட பட்டாசு வாகனம் தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05-09) இரவு சப்பறத் திருவிழா நடைபெற இருந்தது.
அந்த விழாவில் பயன்படுத்துவதற்காக பட்டாசுகள் கொண்டு வரப்பட்ட பட்டா ரக வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கும் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
தீப்பற்றிய நிலையில் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் தொடர்ச்சியாக வெடித்தன. தகவல் கிடைத்ததும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவு பணியாளர்கள் விரைந்து வந்து ஆலயத்தில் கூடியிருந்த மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், வாகனமும் அதிலிருந்த பட்டாசுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது.

