இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில்; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் காவலர்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியமற்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,தெரிவித்துள்ள நிலையில், செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வு மற்றும் உடற்கூறு ஆய்வுகளின் நம்பகத்தன்மை, அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் உறுதி செய்ய முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்களிடம் ; கருத்து தெரிவித்த ஆணைக்குழு ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா, சம்பந்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கே சுற்றியுள்ள காவல் நிலைய அதிகாரிகள் மீதான சந்தேகம் உள்ளதால், விசாரணைகளின் முன்னேற்றத்திலும் மக்கள் நம்பிக்கை வைக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
‘இவ்வாறான விடயங்களை கையாளும் போது மக்களின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் மக்களின் மனநிலையை மதிக்காமல் நடந்துகொண்டால், நாங்கள் சொல்வதற்கு எவ்வளவு உண்மை இருந்தாலும், மக்கள் அதை ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.
காவல்துறையினர் விசாரணைகளில் தலையிட முடியாது என்று நாங்கள் கூறினாலும், மக்கள் மாறாக நினைத்தால் அதற்கேற்ற மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு சமீபத்தில் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது.
அங்கு இதுவரை 200-க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அப்போதைய யாழ்ப்பாண மேஜிஸ்திரேட் ஆனந்தராஜா (தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றவர்), காணாமல் போனோர் அலுவலகப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பலரையும் அவர்கள் சந்தித்தனர்.
இந்த விசாரணை திறம்பட முன்னெடுக்க வெளிநாட்டு நிபுணத்துவமும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் அவசியம் என்று ஆணைக்குழு முடிவு செய்தது.
சாதாரண காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுவது விசாரணையின் முடிவை பாதிக்கும் அபாயம் உண்டு என்றும் எச்சரித்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால, உள்ளூர் காவலர்களை நியமிப்பதை நியாயப்படுத்தினார்.
காவல்துறையினர் கடமையை மாறி மாறி நிறைவேற்றுவதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பு கடமையை மட்டுமே ஆற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘அதுதான் காவல்துறையின் நடைமுறை. அருகிலுள்ள நிலையங்களிலிருந்தே அதிகாரிகளை அனுப்ப வேண்டும்.
கொழும்பிலிருந்து செம்மணிக்கு காவலர்களை அனுப்ப முடியுமா?’ என அவர் கேள்வியெழுப்பினார்.
அதேவேளை, அகழ்வுகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறுவதாகவும், காவல்துறைக்கு தலையிட அல்லது பாதிக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணி தொடங்கப்பட்டது.
தொல்லியல் நிபுணர்கள், உடற்கூறு நிபுணர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் இணைந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வடக்கு மாகாணத்தில் உள்நாட்டு மோதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி சித்துபாத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது

