கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், ‘வெளிநாடுகளில் உள்ள சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டுவருவதென்பது, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர உடன்படிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம்.
இந்த செயல்முறைகளுக்கு நேரம் எடுக்கும், பல நாடுகளுடன் ஒருங்கிணைப்பும் தேவைப்படும். இத்தகைய சிக்கல்களை முன்னிட்டு இதுவரை கிடைத்துள்ள முடிவுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை,’ என்றார்.
ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக வழங்க முடியாது என்றாலும், எதிர்காலத்தில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்

