தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு ஊர்திப் பயணம் இன்று திருக்கோவில் பகுதியில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையேற்றார்.
கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் தனது பயணத்தை தொடங்கியது.
இந்த நினைவு ஊர்தி, திருக்கோவிலிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை, பாண்டிருப்பு உள்ளிட்ட அம்பாறை மாவட்ட தமிழர் பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.
பின்னர், ஊர்தி மட்டக்களப்பு மாவட்டத்தையும் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களையும் சென்றடைந்து, இறுதியாக தியாகி திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நிறைவு பெறவுள்ளது.

