இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில், ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோர் தமது எக்ஸ் தளப்பக்க பதிவுகளின் மூலம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தனர்.
அவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஆதரித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீவும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியில் 141-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஒரு குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
‘இத்தகைய சான்றுகள் வெளிப்படையாக உள்ள நிலையில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி முன்னேறுவதற்காக நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,’ என தனது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

