இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரி புலம்பெயர் தமிழர்கள் கடந்த திங்கட்கிழமை (15-09) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்; கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது.
தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் அதனைச் சார்ந்த விவாதங்களும் இடம்பெற்றன.
இதனையடுத்து, பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ, வட மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் புதிய பிரேரணையை சமர்ப்பித்துள்ளன. 60ஃடு.1 எனும் முதல் வரைவு வடிவில் வெளியிடப்பட்ட இந்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சூழலில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தேவை என்பதை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்கள் ஜெனிவா நகரில்; கவனயீர்ப்புப் பேரணியை முன்னெடுத்தனர்.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்பாகக் கூடினர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் அவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். சர்வதேச நீதிப் பொறிமுறையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்;.

