இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் தொடர்பான முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30-10) இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
இலங்கை சார்பில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஜி.வி. சியாமலி, கால்நடை அபிவிருத்தி பணிப்பாளர் பி.எஸ்.எஸ். பெரேரா மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் பிரதிநிதி ஒருவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியப் பக்கத்தில், விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை, தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைகள் ஆணையகம், விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பண்ணை இயந்திரமயமாக்கல், இயற்கை வேளாண்மை, விதைத்துறை அபிவிருத்தி, விவசாய தொழில்முனைவு, விவசாயக் கல்வி, மண் ஆரோக்கிய முகாமைத்துவம், சந்தை அணுகல் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர்.
மேலும், கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, டிஜிட்டல் விவசாயம், பயிர் காப்பீடு மற்றும் விவசாய ஆரம்ப நிறுவனங்கள் குறித்த வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இதன்போது, இலங்கை தூதுக்குழு டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விஜயம் செய்து, அங்குள்ள ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளைப் பார்வையிட்டது.
இக்கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிக்கு இருதரப்பினரின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ததாகக் குறிப்பிடப்பட்டது.

