மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளது. அவரது கறுப்பு பணம் நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்த பின்னர், பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின் வழிகாட்டலிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் இன்று (நவம்பர் 1) காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹினட்டியன மஹேஷ் என்ற குற்றவாளியால் மிரட்டல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும், கடந்த ஆண்டு அவர் மீது கொலை முயற்சி நடைபெற்றதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, பாதுகாப்புக்காக கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து முதலில் 5 இலட்சம் கோரப்பட்ட 13 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியை, அவர் மூன்றரை இலட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே, கெஹெல்பத்தர பத்மேவுடன் டுபாயில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
அவர்களுக்கு பத்மேவின் கறுப்பு பணம் வழங்கப்பட்டதா, அதை வெள்ளையாக்கியதா, அல்லது அதனை பல்வேறு முதலீடுகளுக்கு பயன்படுத்தியதா என்பது தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸார் தகவலின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்.

